குளிர்கால மாதங்களில் பாத வறட்சியை தவிர்க்கும் வழிகள்

சருமம் வறண்டு போகும் போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும். குளிர்காலத்தில் ஏற்படும் பாதவெடிப்புகள் மேலும் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கு சரியான முறையில் ஊட்டமளிக்காவிட்டால், விரிசல், இரத்தப்போக்கு ஆகியவையும் ஏற்படுகிறது.

முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து அந்த நீரில் கால்களை 10 நிமிடங்களுக்கு வைத்த பிறகு நீரில் இருந்து கால்களை வெளியே எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம்.

முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் கிரீம் இருப்பது போல, கடினமாக தோள்களை கொண்ட பாதங்களுக்கு சில கிரீம்கள் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் உங்கள் கால்களில் தடவிக் கொள்ளலாம். குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும். தேங்காய் எண்ணெய், நெய், பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் கால்கள் ஈரப்பதமாகவும், ரத்தஓட்டம் சீராகவும் இருக்கும்.

மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும். வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.