முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதற்கு என்ன காரணம்??

எல்லோருக்கும் தனது முகத்தினை கண்ணாடியில் பார்க்கும் பொழுது பல மனக்குறைகள் ஏற்படும். கரும்புள்ளி, முக சுருக்கம், வயதான தோற்றம். ஏன் தனக்கு வயதுக்கு மீறின முதுமையாகத் தோன்றுகின்றது என வருந்துவர். ஆனால் சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.

சூரிய ஒளி உடலுக்குத் தேவைதான். வைட்டமின் டி சத்திற்கு அது மிகவும் அவசியமானது. அதுவே மிக அதிக நேரம் கடும் வெயிலில் இருப்பது சருமத்தினை வெகுவாய் பாதிக்கும். சரும பாதுகாப்பு லோஷனை தடவி வெளியில் செல்வதே நல்லது.

காரமான சோப்புகளை உபயோகிப்பது தேவையான ஈரப்பதத்தினை நீக்கி வறண்ட சருமம் ஆக்கிவிடும். இது முதுமைத் தோற்றத்தினைக் கூட்டும். சருமத்திற்கு மாஸ்ட்ரைஸர் உபயோகிப்பது நல்லது.

பலருக்கு குப்புற படுத்து முகத்தினை புதைத்து தூங்கும் பழக்கம் உண்டு. காலப்போக்கில் தலையணை, பெட்ஷீட் போன்றவைகளால் முகத்தில் தேய்க்கும் காரணத்தால் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படலாம்.

கண்களை அடிக்கடி சுருக்கி படிப்பது முதுமையை கூட்டும். உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இவை உண்டால் முதுமை துள்ளி ஓடும். கார்ப்போஹைடிரேட் அதிகமுள்ள உணவு, அதாவது எப்பொழுதும் சாதம், இட்லி, தோசை போன்ற மாவு சத்து உணவினையே உண்பவர்கள் முகம் எளிதில் முதுமை அடைந்து விடும்.

புகை பிடிப்பவர்களுக்கும், மது அருந்துவபவர்களுக்கும் முகத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படும். உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு முதுமைத் தோற்றம் எளிதில் ஏற்படும். தூசு, மாசு நிறைந்த சூழல் சரும பாதிப்பினை ஏற்படுத்தும். இரவில் செல்போனிலேயே காலம் கடத்துபவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் ஒளி தூக்கத்தினை கெடுத்து விடும். இதனால் முகம் வயதான தோற்றத்தினைக் காட்டும்.