தங்கம் விலை அதிரடி உயர்வு; பவுன் ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

பின்னர் தங்கம் விலை சில வாரங்களுக்கு முன்பு குறைந்தபடி இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விலை மீண்டும் உயர்ந்தபடியே இருந்து வருகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.776 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 864-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 733 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,900 உயர்ந்து ரூ.69 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கிறது.

கடந்த மாதம் தங்கம் விலை குறைந்தபடி ரூ.37 ஆயிரத்துக்குள் வந்தது. இதனால் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே விலை உயர்ந்தபடி இருக்கிறது. இன்று விலை உயர்வு காரணமாக தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.