டப்ஸ்மாஷ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய ரெடிட் நிறுவனம்

டப்ஸ்மாஷ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி தன்னுடைய நிறுவனத்துடன் இணைத்துள்ளது ரெடிட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டப்ஸ்மாஷ் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களைக் கவர்ந்துள்ள ஒரு செயலியாக இருந்து வருகின்றது. அதாவது இந்த டப்ஸ்மாஷ் செயலியின் மூலம் பயனர்கள் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், இசை மற்றும் இணைய போக்குகளிலிருந்து ஆடியோ பதிவு அல்லது சவுண்ட்பைட்டைத் தேர்வுசெய்து, அந்த ஆடியோவின் மீது தங்களைத் தாங்களே டப்பிங் செய்யும் வீடியோவைப் பதிவு செய்யலாம்.

மேலும் இந்த டப்ஸ்மாஷ் செயலியானது iOS மற்றும் Android என்ற இரண்டிலும் பயன்படுத்த முடிவதாக இருந்தது.

2014 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஜோனாஸ் ட்ரூப்பல், ரோலண்ட் கிரென்கே மற்றும் டேனியல் டாஷிக் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ஓரளவு வளர்ந்தது.

அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு டப்ஸ்மாஷ் நிறுவனம் ஜெர்மனியில் இருந்து நியூயார்க்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த டப்ஸ்மாஷ் நிறுவனத்தினை கடநற்த 13 ஆம் தேதி ரெடிட் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரெடிட்- டப்ஸ்மாஷுடன் இணைந்து சில புதுவித மாற்றங்களுடன் நிறுவனத்தை புதுப்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பினை ரெடிட் நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது.