நடிகர் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படப்பிடிப்பு விரைவில் நிறைவு

சென்னை: நடிகர் அருண்விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பின் இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

படத்தின் படப்பிடிப்பும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. ஆனால், பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.

சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து இப்படத்தின் நாயகனாக அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்நிலையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.