நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தந்தை தயாரிப்பில் நடிகர் ஜீவா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் நடித்து கடந்த வருடம் கீ, கொரில்லா ஆகிய படங்கள் வெளியாது. இந்த வருடம் ஆரம்பத்தில் சீறு, ஜிப்ஸி படங்கள் திரைக்கு வந்தன. ஜிப்ஸி படத்தை ராஜூமுருகன் இயக்கி இருந்தார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்த புதிய படத்தில் நடிக்க ஜீவா தயாராகி உள்ளார்.

இந்த படத்தை அவரது தந்தை ஆர்.பி.சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். ஏற்கனவே தனது தந்தை தயாரித்த ஆசை ஆசையாய் படம் மூலம்தான் முதன் முதலில் சினிமாவில் ஜீவா அறிமுகமானர்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த ராம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்கள் வெற்றி பெற்று அவரை முன்னணி நடிகராக உயர்த்தியது. கடைசியாக 2011-ல் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த ரவுத்திரம் படத்தில் நடித்து இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தந்தை தயாரிப்பில் நடிக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். இவர் சசியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காஷ்மீரா பர்தேஷி, பிரயாகா நாக்ரா, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.