புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி!

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'சிறுத்தை' என்ற திரைப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இயக்குனர் சிவா இயக்கிய இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த படம் கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் 'சுல்தான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'சுல்தான்' படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகும் நிலைக்கு வந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.