அரசியல் குறித்து பேசி நேரத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை; நடிகர் ராகவா லாரன்ஸ்

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக இருந்து சமூகத்திற்காக சேவை செய்வது நல்லது என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

எந்த ஒரு கஷ்ட காலத்திலும் முதல் நபராக பொது மக்களுக்கு உதவி செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகிறார். இதனை அடுத்து அவர் விரைவில் அரசியலில் நுழைவார் என்றும், அரசியலுக்கு வருவதற்காக தான் அவர் இந்த உதவிகளை செய்து வருவதாகவும் ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தனது அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசியலுக்கு வந்து ஒரு பதவியை வகித்து அதன் பிறகு ஏழை மக்களுக்கு நான் தொண்டு செய்வேன் என்று கூறி நேரத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக இருந்து சமூகத்திற்காக சேவை செய்வது நல்லது என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

இதற்கு முன்பு நான் பதிவிட்ட வீடியோ எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அவர்களின் கனவுகள் நனவாகியிருப்பதை நீங்கள் காணலாம். இந்த குழந்தை உட்பட, மேலும் 200 குழந்தைகள் படிக்கின்றனர். அரசியலில் நுழையாமல் இதைச் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.