பூரண நலமுடன் திரும்ப பிரார்த்திக்கிறேன்; பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். முக்கியமாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற செண்டிமெண்டும் தமிழ் சினிமாவில் உண்டு. ரஜினியின் சமீபத்திய பேட்ட, தர்பார் முதற்கொண்டு ஏராளமான படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

இந்திய மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.