ஏழைகளுக்கு உதவுவதற்காக சொத்துகளை அடமானம் வைத்த நடிகர் சோனு சூட்!

நடிகர் சோனு சூட் ஏழைகளுக்கு உதவுவதற்காக சொத்துகளை வங்கியிடம் ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் கள்ளழகர், ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வந்த சோனு சூட் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த இவர் கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். சோனுசூட்டை பஞ்சாப் மாநில அடையாளமாக தேர்தல் கமிஷன் அறிவித்து கவுரவித்தது.

இந்த நிலையில் ஏழைகளுக்கு உதவுவதற்காக சோனு சூட் தனது பெயரிலும் மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் வீடுகள் என்று 8 சொத்துகளை வங்கியிடம் ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதனையடுத்து அவரை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.