நடிகர் மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்றார் நடிகர் விஜய்!

நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மத்தியில் 'கிரீன் இந்தியா சவால்' பிரபலமாகி வருகிறது. ஒரு நடிகர் அல்லது நடிகை மரக்கன்று நட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதுபோல் மரக்கன்று நடும்படி மூன்று பேருக்கு சவால் விடுக்க வேண்டும்.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடியபோது மரக்கன்று நடும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது பிறந்த நாளை கொண்டாட இதை விட சிறந்த முறை இல்லை. நான் கிரீன் இந்தியா சவாலை நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருக்கு விடுக்கிறேன். எல்லைகள் கடந்து இந்த சங்கிலி தொடரட்டும். இதற்கு ஆதரவு தாருங்கள். பசுமையான உலகை நோக்கி செல்வோம் என்ற பதிவையும் வெளியிட்டார்.

இந்த சவாலை நடிகர் விஜய் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் மகேஷ்பாபுவின் கிரீன் இந்தியா சவாலை விஜய் ஏற்றுக்கொண்டு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று நட்டார். மரக்கன்று நடும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.