பெரிய கதாநாயகர்கள் பெண்களை காட்சிப்பொருளாக பயன்படுத்துகின்றனர்; நடிகை கங்கனா குற்றச்சாட்டு

பெரிய கதாநாயகர்கள் பெண்களை படங்களில் காட்சிப்பொருளாக பயன்படுத்துகின்றனர் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னணி இந்தி நடிகர்களின் பட நிறுவனங்கள், இந்தி பட உலகினருக்கு எதிரான செய்திகள் வெளியாவதை தடுக்க கோர்ட்டுக்கு சென்றுள்ளன. இதனை விமர்சித்து நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:-

சினிமா துறையில் எனது மோசமான ரகசியங்களை நீ மறைத்து வை. உனது ரகசியங்களை நான் மறைக்கிறேன் என்ற எழுதாத விதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே ஒருவர் மீது ஒருவர் விசுவாசம் காட்டுகின்றனர். சினிமா குடும்பங்களை சேர்ந்த சிலரின் கட்டுப்பாட்டில்தான் திரைப்படத்துறை இருக்கிறது.

இந்த நிலைமை மாறுவது எப்போது? போதை மருந்து, வாரிசு அரசியல், மோசடி போன்றவை நிரம்பியுள்ள இந்தி திரையுலகின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாக்கடையை இந்தி திரைத்துறையினர் சுத்தம் செய்யாமல் பதிலடியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

என் மீதும் வழக்கு தொடருங்கள். நான் உயிரோடு இருக்கும்வரை எல்லோரது விஷயங்களையும் அம்பலப்படுத்துவேன். பெரிய கதாநாயகர்கள் பெண்களை படங்களில் காட்சிப்பொருளாக பயன்படுத்துகின்றனர். இளம் பெண்களை ஏமாற்றுகிறார்கள். இளம் நடிகர்களை வளரவிடாமல் தடுக்கின்றனர். அவமானத்தை சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? என்று இப்போது உணர்ந்துள்ளனர். இதனால் ஓடி ஒளிய நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.