மாமன்னன் படம் வசூல் சாதனையால் சம்பளத்தை உயர்த்திய நடிகை கீர்த்தி சுரேஷ்

சென்னை: மாமன்னன் படம் வசூல் சாதனை நிகழ்த்தி வெற்றி படமாக அமைந்ததையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகையர் திலகம் படத்தில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் மளமளவென அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினி முருகன் முக்கிய படமாக அமைந்தது.

விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுசுடன் தொடரி, ரஜினிகாந்துடன் அண்ணாத்த என்று பெரிய நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்தார். பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஆனாலும் அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று பேசப்பட்டது. இந்த நிலையில் உதயநிதியுடன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த மாமன்னன் படம் வசூல் சாதனை நிகழ்த்தி வெற்றி படமாக அமைந்துள்ளது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை ரூ.2 கோடி வாங்கியவர் இப்போது ரூ.3 கோடி கேட்பதாக கூறுகின்றனர். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட கண்ணிவெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.