கஞ்சா கடத்தில் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட நடிகை கிரிசன் பெரேரா விடுதலை

ஷார்ஜா: விடுதலை ஆனார்... கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பாலிவுட் நடிகை கிரிசன் பெரேரா, ஷார்ஜா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இம்மாதம் ஒன்றாம் தேதி, வெப் தொடரில் நடிப்பதற்கான நேர்காணலுக்காக ஷார்ஜா சென்ற கிரிசன் பெரேராவிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி ஐக்கிய அரபு அமீரக போலீசார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் தனது மகள் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் மும்பை போலீசாரிடம் புகாரளித்தார்.

அவர்கள் நடத்திய விசாரணையில், ஒரே குடியிருப்பில் வசித்துவந்த ஆண்டனி பால் என்பவரின் தங்கைக்கும், கிரிசன் பெரேராவின் தாயாருக்கும் நாய் பராமரிப்பு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு பழிவாங்கவே, ஆண்டனி பால் தனது நண்பர் மூலம் கிரிசன் பெரேராவிடம் கஞ்சா பொட்டலம் இருந்த கோப்பை பார்சலை கொடுத்து அனுப்பிவிட்டு, அமீரக போலீசாருக்குத் தகவல் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆண்டனி பாலும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலை ஆனதும், ஆனந்த கண்ணீர் வடித்தப்படி கிரிசன் பெரேரா பேசியபோது அவரது தாயார் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தார்.