பாடகர் எஸ்.பி.பி பெயரை இசை மற்றும் நடன பள்ளிக்கு வைத்து கவுரவப்படுத்திய ஆந்திர அரசு

நெல்லூரில் உள்ள அரசின் இசை மற்றும் நடன பள்ளிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்ற பெயரை சூட்டி ஆந்திர அரசு கவுரவித்துள்ளது.

இந்திய திரையுலகின் புகழ் பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்க வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர். இந்த நிலையில் ஆந்திர அரசின் இசைப்பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து ஆந்திர தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மிகபட்டி கவுதம் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைவராலும் மதிக்கப்பட்ட தன்னிகரற்ற பாடகர். நெல்லூரில் உள்ள அரசின் இசை மற்றும் நடன பள்ளிக்கு டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்ற பெயரை சூட்ட அரசு முடிவு செய்து இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.பி.பியின் மகன் சரண் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.