ரஜினி இல்லாமலேயே அண்ணாத்த படப்பிடிப்பு துவங்குகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை தொடங்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலை வந்த பின்னர் அல்லது கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடித்த பின்னரே ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு வருவார் என்று அவரது தரப்பில் கூறப்பட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை படமாக்க சிறுத்தை சிவாவிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டதாகவும், இதனை அடுத்து அரசு அனுமதி கிடைத்ததும் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும் என்றும் அதன் பின்னர் கொரோனா நிலைமை சரியானதும் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.