என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள்; ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வந்த நிலையில் திடீரென இன்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரமுகர்களும் தங்களது சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்கின்றனர்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் தனுஷ், இயக்குனர் சுப்பிரமணியன சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், நடிகர் பிரசன்னா, நடிகர் சரத்குமார், உள்பட பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக அனைத்து இசை ரசிகர்களும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். அவரது குரல் மிகவும் அற்புதமானது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.