விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரின் படமும் முதல்முறையாக ஒரே நாளில் மோதல்

சென்னை: விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரின் படமும் வரும் மே 19ம் தேதியன்று வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் சில நேரங்களில் ஒரே நாளில் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிடும். அந்த வகையில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரின் படமும் வரும் மே 19ம் தேதியன்று வெளியாகிறது.

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி குறுகிய காலகட்டத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடியவர். கதாநாயகனாக மட்டுமல்லாமல், வில்லன் கதாபாத்திரத்திலும் பட்டையைக் கிளப்பக்கூடியவர். இவர் எந்த ரோலில் நடித்தாலும், அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இருந்தாலும் இவரது சில படங்களும் தோல்வியடைந்து உள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. ஒருசில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் மே 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

அதேபோல் நடிகர் விஜய் ஆண்டனியின் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அவர் நடிப்பில் சில படங்கள் வெளிவந்தாலும், அவர் கதைகளை நல்லமுறையில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் அவர் நடிப்பில் முன்னதாக 'பிச்சைக்காரன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, தற்போது இவரது நடிப்பில் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடித்துள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பு. இப்படமும் வரும் மே 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திரையில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதியுள்ள நிலையில், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி படங்கள் மோதுவது இதுதான் முதல்முறையாகும். அதனால் இந்த ரேஸில் யார் ஜெயிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு, இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.