முறையான ஆவணங்களை சமர்ப்பித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தொடக்கினர்

சென்னை: மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்த நிலையில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் படத்திற்கான கூடுதல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதாகவும், படப்பிடிப்பு நடத்த மாவட்டத்தின் எந்த துறையிடமும் படக்குழு அனுமதி பெறவில்லை என்பதால் படத்தை உடனே நிறுத்தக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், படப்பிடிப்புக்காக அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு அதே இடத்தில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.