நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் 'சக்ரா' படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனத்திடம் கூறிய அதே கதையை தான் இயக்குனர் ஆனந்தன் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்து உள்ளதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது
மேலும் விஷால் நடித்த 'ஆக்சன்' படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த நஷ்டத்தை சரிக்கட்ட ரூபாய் 8 கோடியே 29 லட்சம் தருவதாக விஷால் ஒப்புக் கொண்டதாகவும் அந்த பணத்தை உடனடியாக அவர் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் வரும் 24-ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தன் ஆகிய இருவருக்கும் சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ் குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.