நடிகர் விஜய் வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைப்பு

சென்னை: நடிகர் விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கோர்ட் தெரிவித்தது.

இதனையடுத்து, விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. அதே சமயம் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய் தரப்பில் கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்நிலையில், சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என கூறி நடிகர் விஜய் வழக்கை முடித்து வைத்து நீதிபதி சுரேஷ்குமார் அவர்கள் உத்தரவிட்டார்