வில்லன் நடிகரை அடிக்கத் தயங்கிய சிரஞ்சீவி... காரணம் என்ன?

டோலிவுட் திரையுலக முன்னணி நடிகரான சிரஞ்சீவி, படப்பிடிப்பின் போது திடீரென வில்லன் நடிகரை அடிக்கத் தயங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'ஆச்சார்யா'. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய வில்லனாக சோனுசூட் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி மற்றும் சோனு சூட் மோதும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது சோனுசூட்டை காலால் உதைக்க வேண்டிய காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளவர் சோனுசூட். அவருக்கு தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அப்படி ஒரு இமேஜை பெற்றுள்ள அவரை நான் காலால் அடித்தால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள், அது மட்டுமின்றி ரசிகர்கள் என்னை வெறுக்கவும் செய்வார்கள் என்று கூறி சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த காட்சியை வேறு விதமாக மாற்றி இயக்குனர் படமாக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.