நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்

சிம்பு மீது புகார்... தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு தற்பொழுது சுசீந்திரன் இயக்கும் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் காமெடி, எமோஷன், காதல், ஆக்சன் என அனைத்தும் கலந்து உருவாகி வரும் இப்படத்துக்காக தனது உடல் எடையை குறைத்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றி இருந்ததால், இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதில், சிம்பு உயிருடன் உள்ள பாம்பையும் மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது.

வன விலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் சிம்பு மீது வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.