நடிகர் கார்த்தியின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஒரு பக்கம் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது சகோதரர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் விவசாயிகளுக்கு உதவி செய்துவரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளாகவும் புதர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் உழவன் பவுண்டேஷன் செலவு செய்து உள்ளது.

கடந்த 21 நாட்களாக இந்த கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிந்து விட்டால் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பது மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள 10 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் இந்த முயற்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.