நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங். சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். தற்போது நன்றாக உணர்கிறேன். ஓய்வுக்கு பிறகு விரைவில் படப்பிடிப்புக்கும் திரும்புவேன். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் நன்றி என்று கூறியுள்ளார்.

ராகுலின் டுவீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். தைரியமாக இருங்கள். அது தான் இந்த நேரத்தில் ரொம்ப முக்கியம் என்று தெரிவித்துள்ளனர்.

ராகுல் ப்ரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.