முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படம்...பிஸ்கோத் திரைப்படம் குறித்து இயக்குனர் தகவல்

நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆர்.கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பை முடித்து விட்டனர். இது சந்தானத்துக்கு 400-வது படம். இந்த படத்தின் திரைக்கதை 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டு உள்ளது.

சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னனாக சந்தானம் நடித்துள்ளார். சரித்திர காலத்து ஆடைகள், யானைகள், பல்லக்கு, வாள், கத்தி, போன்றவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. 30 நிடங்கள் இந்த காட்சிகள் இடம்பெறும் என்றும் இதில் 500 நடிகர், நடிகைகள் சரித்திர கால உடை அணிந்தே நடித்துள்ளனர் என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.

படம் குறித்து அவர் மேலும் கூறுகையில், பிஸ்கோத் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ரசிகர்களை முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் படம்போல் சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும்.

சவுகார் ஜானகி, தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்பாலா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படம் தியேட்டரில் வெளியிடப்படும் கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும் என்றார்.