தமன்னாவின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் கடும் விமர்சனம்

அமெரிக்காவில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் கேரளாவில் கர்ப்பமான யானை ஒன்றின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு சம்பவத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் மவுனம் உங்களை காப்பாற்றாது. மனிதனோ விலங்கோ ஒவ்வொரு உயிரும் முக்கியம் இல்லையா? எந்த ஒரு படைப்பையும் அழிப்பது இயற்கை விதிகளுக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதர்களாக மாறி, அன்பை பரிமாறி, இரக்கத்தை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு #Blacklivesmatter #AllLivesmatter என்ற ஹாஷ்டேகுகளையும் பயன்படுத்தியிருந்தார்.

தமன்னாவின் பதிவுக்கு பலர் பாராட்டு தெரிவித்த நிலையில், பலர் அவரது பதிவின் கீழ் கமெண்டில் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

‘வெளிநாட்டில் வாழும் கறுப்பின மக்களுக்காக குரல் கொடுப்பது நல்ல விஷயம் தான். நீங்கள் உள்நாட்டில் இருக்கும் கறுப்பு நிற மக்களை பாதுகாப்பற்ற முறையில் உணர வைக்கும் வெள்ளைத் தோலை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்தது ஏன்?’, முதலில் அதையும் இதையும் போட்டு குழுப்பிக் கொள்ள வேண்டாம். அங்கே நடப்பது அநியாயமானது. நீங்கள் இரண்டையும் ஒப்பிடுவது முட்டாளதனமாக இருக்கிறது. முதலில் ஒரு பிரச்சினையை பற்றி பேசும் முன் அதை பற்றி தெரிந்து கொண்டு வாருங்கள்’ என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதில் ஒருவர் தனது கமெண்டில், ‘முக்கியமான இரண்டு விஷயங்களை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். #Blacklivesmatter என்பதை வெறும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கவேண்டாம். கறுப்பின மக்கள் மட்டுமே வாழவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அவர்களை நீங்கள் சமமாக நடத்தாத வரை அனைத்து மக்களும் வாழ்ந்துவிடமுடியாது. பாலிவுட் பிரபலங்கள் அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுங்கள். லட்சக்கணக்கான இந்திய பெண்களை நிறம் குறித்து சந்தேகப்படவைக்கும் அந்த விளம்பரங்களில் நடிக்கும் உங்கள் சக நண்பர்களுக்கு எதிராக முதலில் பேசுங்கள்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.