நல்ல கதாபாத்திரங்கள் வருவதற்கு பயம்தான் காரணம்; நடிகை சமந்தா பேட்டி

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பலர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன.

எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ஆகும்.

திருமணம் ஆனபிறகும் எனக்கு வித்தியாசமான கதைகளும் ரசிகர்கள் பாராட்டும் கிடைக்கிறது. நான் நாகார்ஜுனா வீட்டு மருமகள். அவர் குடும்பத்து பெயர் என்னால் கெடக்கூடாது என்று ஜாக்கிரதையாக கதைகள் தேர்வு செய்கிறேன்.

இப்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அந்த மாதிரி கதாபாத்திரம் எனக்கு வரும்போது இதை என்னால் செய்ய முடியுமா முடியாதா என்ற பயம் எனக்குள் ஏற்பட வேண்டும். அப்படி பயம் இருந்தால்தான் இன்னும் கவனமாக அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும். சமீபத்தில் எனக்கு நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் வருவதற்கு காரணம் இந்த பயம்தான். இவ்வாறு சமந்தா கூறினார்.