நடிகர் வினித் பெயரில் போலி கணக்கு உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடி

நடிகர் வினித் பெயரில் போலி கணக்கை உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ஆவாரம்பூ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினித். புதிய முகம், காதலர் தினம், மே மாதம், ஜாதிமல்லி, சந்திரமுகி, சர்வம் தாள மயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். வினித் பெயரில் ஆன்லைனில் பண மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

வினித் பெயரில் போலி கணக்கை உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு பணம் பறித்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து வினித் அதிர்ச்சியானார்.

இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பிக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் எங்கள் குடும்ப படத்தையும் எனது சமூக வலைத்தள கணக்கை போலியாக பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வினித் அளித்துள்ள பேட்டியில், எனது நண்பரிடம் மோசடி கும்பல் தொடர்பு கொண்டு பேசி உள்ளது. அவர்தான் இந்த மோசடியை என்னிடம் தெரிவித்தார். மக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.