விஷ்ணு விஷால் பெயரில் மோசடி... எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்!

வெண்ணிலா கபடி குழு படம் மூலம்தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது எப்.ஐ.ஆர். என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக புதுமுக நடிகைகளிடம் மோசடி நடக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதன் என்ற பெயரில் வலைத்தளத்தில் ஒருவர் புதுமுக நடிகைகளுக்கு அனுப்பி உள்ள குறுந்தகவலில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை புதிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க உள்ளார். உங்களுக்கு இந்த படத்தில் அவர் வாய்ப்பு அளிக்க விரும்புகிறார். அதிக சம்பளம் கிடைக்கும். இந்த படத்துக்கு பின்னால் திறமையான குழு உள்ளது. சில விஷயங்களுக்கு உடன்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனை விஷ்ணு விஷால் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, எனது பெயரை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை கடுமையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற தகவலை பரப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்படும். நான் வெளியில் எந்த நிறுவனத்தின் படத்திலும் நடிக்கவில்லை. என்னுடைய நிறுவனம் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.