பேனர் வைக்கும்போது ரசிகர்கள் இறந்தால்..சினிமாவையே தடை செய்யலாமா? காயத்ரி ரகுராம் கேள்வி

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான நெட்டிசன்கள் மற்றும் திரையுலகினர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டும் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பாஜக பிரபலம் மற்றும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது:-

நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களுடைய சொந்த பணத்தில் பேனர்கள் வைக்கின்றனர். அவ்வாறு பேனர்கள் வைக்கும் போது தவறி விழுந்து ஒரு சில ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சினிமாவையே தடை செய்யலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு சூர்யா நம்பிக்கையுடன் சில வார்த்தைகள் கூற வேண்டும் என்றும் சூர்யா போன்ற நடிகர்கள் இதனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளை பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு தினமும் ஒரு பரிட்சைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.