அதிர்ஷ்டம் இருப்பதால் திருமணத்திற்கு பின்னும் நல்ல படங்கள் அமைகின்றன; சமந்தா மகிழ்ச்சி

அதிர்ஷ்டம் எனது பக்கம் இருப்பதால் திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்கள் எனக்கு அமைகின்றன என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது ஓ.டி.டி. தளத்தில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியின்போது அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறியதாவது:

சினிமாவில் பிரபலமாக ஒரு பூசணிக்காய் அளவுக்கு திறமை இருந்தாலும் போதாது. கடுகளவு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டுமே பூசணிக்காய் அளவுக்கு இருந்தது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்த கொஞ்ச நாட்களிலேயே அற்புதமான கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தன.

என்னை விட திறமையானவர்கள், அழகானவர்கள் நிறைய பேர் இருந்தாலும் வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. அதற்கு காரணம் அதிர்ஷ்டம்.

திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்களில் நடித்து கொண்டு இருப்பதற்கு காரணம் நிச்சயம் அதிர்ஷ்டம்தான். அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புகிறேன். கதாநாயகிகள் திறமைக்கு திருமணம் ஒரு தடை இல்லை.

திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகள் வராது என்று நம்பி அதற்கும் தயாராகி கொண்டுதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அதிர்ஷ்டம் எனது பக்கம் இருப்பதால் திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்கள் எனக்கு அமைகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.