ஆபாச காட்சிகள் நிறைந்த பாடலில் ஹரே ராம ஹரே கிருஷ்ணா வாசகமா?

ஐதராபாத்: இசையமைப்பாளர் டிஎஸ்பி என அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை போலீசில் புகார் செய்துள்ளார். ஆபாச காட்சிகள் நிறைந்த ஒரு பாடலில் அந்த வாசகம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஹைதராபாத் நகரின் சைராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத், சமீபத்தில் வெளியான தனது தனிப்பட்ட பாடலில் ‘ஹரே ராம ஹரே கிருஷ்ணா’ என்ற இந்து பாடல்களை பயன்படுத்தியுள்ளார்.

இதனால் தானும், தான் சார்ந்த இந்து சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்துக்களின் புனித கடவுளான ராமரை வணங்கும் போது “ஹரே ராமா… ஹரே கிருஷ்ணா” என்ற கோஷத்தை பயன்படுத்துகிறோம்.

ஆபாச காட்சிகள் நிறைந்த ஒரு பாடலில் அந்த வாசகம் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களை புண்படுத்தியதற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கராத்தே கல்யாணி வலியுறுத்தியுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் இந்தியாவின் முதல் பான்-இந்திய பாப் பாடலை வெளியிட்டார். இந்த பாடல் 2 கோடி பார்வைகளை கடந்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.