நான் 2015 முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன் - நடிகை பாயல் கோஷ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருக்கு வயது 34. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மன அழுத்தம் என்பது கிட்டத்தட்ட அனைவருமே சந்திக்கும் ஒன்றுதான். அந்த மன அழுத்தத்தில் இருந்து வெல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள், தோல்வி அடைபவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளாக தனக்கும் மன அழுத்தம் இருந்தது என்று நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதுகுறித்த விபரம் வருமாறு:-

நான் 2015 முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். எனக்கும் மரண பயம் உண்டு என்பதை அவ்வப்போது உணர்கிறேன். சில சமயம் இறந்துவிட்டதாக கூட உணர்வேன். அந்த சமயங்களில் உடனே நான் கோகிலாபென் மருத்துவமனைக்கு விரைந்து செல்வேன். ஆனால் இதுபோன்ற தருணங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது குடும்பம், நண்பர்கள் அருகில் இருந்து என்னை காப்பாற்றினார்கள்’.

நடிகை பாயல் கோஷ் நேற்று முன்தினம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் ‘ஏன் சுஷாந்த் ஏன்? என்று பதிவு செய்திருந்தார்.