நான் யெஸ் சொல்லிவிட்டேன்... மலாய்க்கா அரோரா பதிவிட்டுள்ளார்

மும்பை: தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் யெஸ் சொல்லிவிட்டேன்” எனக்கூறி மலாய்க்கா அரோரா பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணிரத்னத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தைய்ய தைய்யா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை மலாய்க்கா அரோரா.

இவர் கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 19 ஆண்டுகள் கழித்து 2017-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், இவர்களுக்கு அர்ஹான் (20) எனும் மகன் உள்ளார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.

தற்போது 49 வயதாகும் நடிகை மலாய்க்கா அரோராவும், அவரை விட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜூன் கபூரும் காதலித்து வருவது பாலிவுட்டில் பேசுபொருள் ஆனது.

எனினும் வயதைக் கடந்த இவர்களது காதல் பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்களது உறவு குறித்து குடும்பத்தாருக்கு எடுத்துக்கூறி அவர்களை தயார் செய்து வருவதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்னதாகப் பங்கேற்ற அர்ஜூன் கபூர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்வார்கள் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து வந்தனர். இந்நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் யெஸ் சொல்லிவிட்டேன்” எனக்கூறி மலாய்க்கா அரோரா பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.