சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது; கேப்டன் கோபிநாத் டுவிட்டர் பதிவு

சூரரை போற்று படம் என் புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சிலர் தெரிவித்தனர். இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் உரிமையாளர் கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly - A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று.

இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு தரப்பினரும் சூர்யாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா? என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள், கோடிக்கணக்கில் வசூல் என ஹாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வேற லெவலுக்கு மாஸ் காட்டி வருகிறது.

ஆனால் இந்த படத்திற்கும் கேப்டன் கோபிநாத்தின் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கருத்துக்கள் எழுந்தது. இதற்கு முன்னதாக சூரரைப் போற்று படத்தை பார்த்த கோபிநாத் பல இடங்களில் கண் கலங்கிவிட்டதாக பதிவிட்டிருந்தார்.

தற்போது படத்திற்கும் தான் எழுதிய புத்தகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் புதிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், சூரரை போற்று படம் எனது வாழ்க்கையில் நடந்தவையாக Simply Fly புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நான் அவர்களிடம் சொன்னேன் இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மசாலா கலந்தால் தானே நல்ல இறைச்சி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.