ஜூன் மாதம் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு அவருடைய பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாட ஏற்கனவே அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். மேலும் தன்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரனோ தாக்கம் வீரியமாக அதிகமாகி வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்கள், நலத்திட்டங்கள், மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒன்றிய, தொகுதி, நகரம் பகுதி மற்றும் வார்டு இளைஞரணி மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தளபதி அவர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.