விஜய்க்கு அமீர்கான் வில்லனா? பேச்சுவார்த்தையில் இறங்கிய தயாரிப்பு நிறுவனம்

சென்னை: விஜய்க்கு அமீர்கான் வில்லனா?... பாலிவுட்டின் ஹீரோவான அமீர் கானை தமிழ் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் செய்ய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரை உலகின் உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அமீர் கான். இவர் அமீர்கான் ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். மேலும் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் நடிகர் அமீர் கான் உள்ளார்.

1965 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த அமீர் கான் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக யாதோன் கி பாரத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு கதாநாயகனாக ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் அமீர்கான் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் தமிழில் நேரடியாக அமீர்கான் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 68 வது படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்த படத்தின் வில்லனாக சஞ்சய்தத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் நடிகர் அமீர்கானையும் வில்லனாக நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். இதற்கு அமீர்கான் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் நடிகர் விஜய்க்கு இணையான சம்பளத்தை அமீர்கானுக்கும் தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் முக்கிய நபர்கள் மும்பையில் முகாமிட்டு நடிகர் அமீர்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.