ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிகர் நிதின் சத்யா வில்லனாக நடிக்கிறாரா?

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிகர் நிதின் சத்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நிதின் சத்யா அதன் பின்னர் சத்தம் போடாதே, சரோஜா, பந்தயம், முத்திரை உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி 'ஜருகண்டி' என்ற திரைப்படத்தை தயாரித்த நிதின் சத்யா, தற்போது 'லாக்கப்' என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் அடுத்த திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படத்தில் வில்லனாக நிதின் சத்யா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்தது.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் நிதின் சத்யா நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது குறித்து விளக்கமளித்த நடிகர் நிதின் சத்யா 'ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நான் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி போலியானது. அதில் சிறிதளவும் உண்மை இல்லை. அந்த படத்தின் குழுவினர் தன்னை இதுவரை அணுகவில்லை. இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.