வரும் 31ம் தேதி விக்ரமின் கோப்ரா படம் வெளியாகிறது என அறிவிப்பு

சென்னை: வரும் 31ம் தேதி ரிலீஸ்.. விக்ரமின் கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தள்ளிப்போகும் என சலசலப்பு நிலவியது.

தற்போது கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் 'கோப்ரா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக அவர் நடிக்கிறார். கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார். விக்ரம், இர்பான் பதான் தவிர 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.