கமல்ஹாசன் வருகிற 27-ந்தேதி 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்!

சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மதுரையில் இருந்து கடந்த 13-ந்தேதி தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், 16-ந்தேதி வரையில் பிரசாரம் மேற்கொண்டார். மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த கமல், தொழில் முனைவோர்கள், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார்.

பல இடங்களில் திறந்த வேனிலும், கமல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கடந்த 20-ந் தேதி 2-ம் கட்ட பிரசாரத்தை சென்னை போரூரில் இருந்து தொடங்கிய கமல்ஹாசன், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்திலும் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து 3-ம் கட்ட பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் உள் அரங்க கூட்டங்களில் பங்கேற்கிறார். அப்போது பல தரப்பட்ட மக்கள் மற்றும் அமைப்பினரை சந்திக்கும் கமல்ஹாசன் அவர்களோடு கலந்துரையாடுகிறார். 3-ம் கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு வருகிற 31-ந் தேதி சென்னை திரும்பும் கமல்ஹாசன், பின்னர் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

புத்தாண்டில் 4-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளும் கமல்ஹாசன், சென்னையிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். சென்னையில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இப்போதே மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.