கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு

திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துவிட்ட போதிலும் திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் மாநிலஅரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒருவேளை ஆகஸ்ட் 31க்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே. அப்படியே அனுமதி கொடுத்தாலும் பார்வையாளர்கள் எந்த அளவிற்கு திரையரங்குக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் ஒரே அம்சமாக ஓடிடி பிளாட்பாரம் மட்டுமே உள்ளது. ஏற்கனவே தமிழில் பெண்குயின், பொன்மகள்வந்தாள் உள்பட ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'மிஸ் இந்தியா' என்ற திரைப்படமும் தற்போது ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 10 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் தற்போதைய நிலையில் இந்த தொகை சரியான தொகை என்றே தயாரிப்பாளர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மிஸ் இந்தியா படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு, நதியா, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.