திரை அரங்குகள் திறந்த நிலையில் மீண்டும் பல தியேட்டர்கள் மூடல்... காரணம் இதுதான்!

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதனை அடுத்து நாட்டின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. தமிழகத்திலும் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரை அரங்குகள் திறந்த நிலையில் திரையரங்குகளில் போதிய பார்வையாளர்கள் வராததால் மீண்டும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பயம் காரணமாக திரையரங்குகளுக்கு செல்வதற்கு பார்வையாளர்கள் பயப்படுகிறார்கள் என்றும் ஓடிடி பிளாட்பாரத்தில் அதிக அளவில் புதிய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் வீட்டில் இருந்தே திரைப்படம் பார்ப்பதே பாதுகாப்பானது என்று பொதுமக்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு திரையரங்கு உரிமையாளர் கூறுகையில், எங்களுடைய தியேட்டரில் 1200 பார்வையாளர்கள் படம் பார்க்கும் வசதி உள்ளது. அரசு நிபந்தனையின்படி 600 பேர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் 25 முதல் 30 பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க வருகின்றனர். நிர்வாக செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் மீண்டும் தியேட்டரை மூட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாததாலும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் நிலையில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவராவிட்டால் பெங்களூர் நிலைமைதான் தமிழகத்துக்கும் ஏற்படும் என்று கூறப்படுவதால், என்ன நடக்கிறது என்பது நாளை தெரியவரும்.