மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - நடிகர் சிரஞ்சீவி

நடிகை சமந்தா தொலைக்காட்சியில் பிரபலங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் நடிகர்-நடிகைகள் பங்கேற்று சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பேசி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சங்கராபரணம் படம் வெளியானபோது பிரபலங்களுக்காக படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டனர். கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு அழுகை வந்தது. நான் அழுவதை பார்த்த அருகில் இருந்த நடிகை மஞ்சுபார்கவி தனது துப்பட்டாவை கொடுத்தார். அந்த துப்பட்டாவை வைத்து கண்ணீரை துடைத்தபோது அரங்கில் லைட்டை போட்டு விட்டனர்.

அந்த அரங்கில் எனது வருங்கால மனைவி சுரேகாவும் அவரது தந்தை அல்லு ராமலிங்கையாவும் இருந்தனர். மஞ்சுபார்கவி துப்பட்டாவை வைத்து கண்ணீரை துடைத்ததை பார்த்து அவர்கள் தவறாக நினைத்து இருப்பார்களோ என்ற குழப்பம் இருந்தது. அந்த சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு அல்லு ராமலிங்கையா தனது மகள் சுரேகாவை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

சுரேகா மறுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னை மணந்து கொண்டார். எனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுத விருப்பம் உள்ளது. எனக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று சிரஞ்சீவி கூறினார்.