பாரதிராஜாவை வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: உடல் நலம் தேறி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பாரதிராஜாவை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல் நலம் தேறி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் ஓய்வு பெற்று வந்த பாரதிராஜாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதனையடுத்து தற்போது மீண்டும் பாரதிராஜாவுக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மேலும் தற்போது உடல் நலம் தேறி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பாரதிராஜாவை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.