விநாயகனுக்கு குவிகிறது வாய்ப்புகள்... விரைவில் வெளியாகும் அறிவிப்பு

சென்னை: ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தமிழில் விநாயகனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றியினை பெற்றது. வசூல் ரீதியிலும் ரூ.630 கோடியை தாண்டி சாதனை படைத்தது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் சுனில் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் வர்மாவாக நடித்து மிரட்டி இருக்கிறார். 'மனசுலாயோ' என அவர் பேசி நடித்த வசனம் சமூக வலைதளங்களில் இப்போதும் பேசும் பொருளாக உள்ளது.

இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்துக்காக ரூ.35 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து விநாயகன் அளித்த பேட்டியில் நான் ஜெயிலர் படத்தில் ரூ.35 லட்சம் சம்பளம் பெற்றதாக தகவல்கள் பதிவாகி உள்ளது. நான் ரூ.35 லட்சத்தைவிட 3 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றேன். படப்பிடிப்பில் என்னை மிகவும் நன்றாக நடத்தினார்கள்.

என் வாழ்க்கையில் அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த படம் ஜெயிலர்தான். இதனால் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தமிழில் விநாயகனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.