பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

சென்னை: பழம் பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம் (78). வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாணி ஜெயராம் வீட்டு பெண் பணியாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், படுக்கைறையில் இறக்கவில்லை. தரையில் இறந்து கிடந்ததாகவும், அவரது நெற்றியில் காயம் இருந்ததாகவும் கூறினார்.

1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். குடியரசு தினத்தை ஒட்டி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.