மஞ்சள் பை திரைப்படத்தின் இயக்குனர் ராகவனுடன் கை கோர்த்த பிரபுதேவா

மஞ்சள் பை திரைப்படத்தின் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் நாயகனாக பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

'மஞ்சப்பை', 'கடம்பன்' ஆகிய படங்களை இயக்கியவர் ராகவன். இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காகக் கதை எழுதி வந்தார். அதன் திரைக்கதை அமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு நடிகர்களிடம் சொல்லத் தொடங்கினார்.

இந்தக் கதையைக் கேட்ட பிரபுதேவா, உடனடியாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதில், நடிகர் சந்தானத்தின் மகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது உண்மையில்லை என்கிறது படக்குழு.

சந்தானம் மகனை நடிக்கவைக்க முதலில் பேசியது உண்மைதான். ஆனால், அந்த முடிவைக் கைவிட்டுவிட்டோம். விரைவில் யார் நடிக்கிறார் என்ற விவரத்தை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் தயாரிப்புத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பஹீரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. அதனைத் தொடர்ந்து ராகவன் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.