4 ஆண்டுகளாக ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளுக்கு உதவும் ராகவா லாரன்ஸ்!!

நடிகர், நடன இயக்குனர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் இந்த கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்தது மட்டுமின்றி ஊரடங்கு நேரத்தில் வறுமையால் வாடும் பலரின் பசியை போக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் செய்த மேலும் ஒரு உதவி குறித்த தகவல் வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற பெண் ஒருவர் நான்கு குழந்தைகளையும் வளர்ப்பது மற்றும் படிக்க வைப்பது உள்பட மற்ற செலவுகளுக்கு திண்டாடி உள்ளார். இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் அந்த நான்கு குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக அந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் இந்த ஆண்டும் அந்த குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ராகவா லாரன்ஸ் கட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அந்த நான்கு குழந்தைகளின் தாயார் கூறியிருப்பதாவது:-

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நான்கு குழந்தைகளையும் அவர்தான் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இது நான்காவது வருடம். இந்த கொரோனா காலகட்டத்தில் கூட என்னால் உதவ முடியாது என்று கூறாமல் இந்த வருடமும் என்னுடைய குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை அவர் கட்டியுள்ளார். அதற்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் ரொம்ப நாள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் வெளிவந்ததை அடுத்து ராகவா லாரன்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.