சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி விவகாரம் பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பல திரையுலக பிரமுகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-
அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம். இன்று கிருத்திகை, எனவே நான் உங்கள் அனைவருடனும் ஒருகருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்த சஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்து காட்டுவார். அதன் சக்தியை நான் அறிந்து உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னை பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.
எங்கள் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இன்று எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஏற்கனவே அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாக பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். அதற்கு முன் எல்லாமே ஒன்றுமே இல்லை. காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.